ஓ.பி.எஸ், மற்றும் ரவீந்தரநாத் மீதான வழக்கு ரத்து..!

ஓ.பி.எஸ், மற்றும்  ரவீந்தரநாத் மீதான வழக்கு ரத்து..!

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், போடி  தொகுதியில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், கல்வித்தகுதிகள் குறித்த தகவல்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, மிலானி என்பவர் தேனி  எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதுமன்றத்தில்  புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான புகார்கள் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு  உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பன்னீர் செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேனி நீதிமன்றத்தில் புகார்தாரர் தாக்கல் செய்த புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், பிரமாண மனு இல்லாமல் தாக்கல் செய்யப்படும் புகார் மனுவை ஏற்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க    |  கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு ரத்து!