குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி தவறாக பேசிய வழக்கு: சீமான் ஆஜராக தேதி குறித்த நீதிமன்றம் ..!

குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி தவறாக  பேசிய வழக்கு:  சீமான் ஆஜராக தேதி குறித்த நீதிமன்றம் ..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலின் போது குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி தவறாக  பேசிய வழக்கில் ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் வரும் 30-ந் தேதி சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது இந்த பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 11- ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இன்று மீண்டும் ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. சீமான் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. சீமானுக்கு  மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால் அவரால் இன்று ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

மேலும் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தருவதாக சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதையும்  படிக்க   | மக்கள் உறுப்புதானம் செய்ய தாமாக முன்வந்தாலும், மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது” - சென்னை உயர்நீதிமன்றம்