ஸ்டெர்லை ஆலை மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கு.. ஒரு வாரம் ஒத்திவைப்பு...

தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஸ்டெர்லை ஆலை மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கு.. ஒரு வாரம் ஒத்திவைப்பு...

தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

அதில், "தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது.

மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு ஆணை 72 ன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.

வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அவசரகால நிலையைகூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப் பொருள்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்த நிகையில் அவையும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து நிறுவனத்தின் உள்ளே உள்ள ஆபத்தான மூலப்பொருள்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அரசாணை எண் 83-ன் படி உள்ளூர் உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது 2132. 64 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்ஸிஜனை மற்றும் 7833 மெட்ரிக் கியூப் கேஸ் மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர்.

தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை  வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள் கழிவுகள் ஆகியவை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதலாக 2 வார கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை 1 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.