பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்ட அவர் பாஜகவில் கடந்த 2020 இல் இணைந்தார். இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரான பிறகு அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அது போல் அடுத்த 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி ஏற்படும் என தற்போதைய தலைவர் அண்ணாமலை அடித்து கூறுகிறார். மேலும் அதற்கான பணிகளை தாம் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறி வருகிறார்.
இந்த நிலையில் இவர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதாக அமித்ஷாவுக்கு உளவுத் துறையினர் அறிக்கை அளித்துள்ளனர். இதன் பேரில் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.