தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...
கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், டெல்டா மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும் வரும் 24 மற்றும் 25ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.