13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,  திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.