சென்னை விமான நிலையம்: புதிய முனையத்தில் இன்று முதல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

சென்னை விமான நிலையம்: புதிய முனையத்தில் இன்று முதல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

சென்னை புதிய முனையத்தில் இன்று முதல் விமான போக்குவரத்து தொடங்கப் பட்டுள்ளது. ஒரு மாதத்தில் முழு சேவை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் முதல் கட்டமாக 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் 8ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சென்னை விமான நிலையத்தில்  ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி முதல் சோதனை ஒட்டம் தொடங்கியது. பின்னர் விமான நிலையத்தில் கூடுதலாக சில அபிவிருத்திப் பணிகள் செய்யப்பட்டன.

மே மாதம் 3ந் தேதியில் இருந்து சோதனை முறையில் சில  விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் வந்து சென்றன. குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும்  சோதனை முறையில் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம் இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன. 

சோதனை ஓட்டத்தின் போது ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், செல்போன் சிக்னல்களில் தடை ஏற்பட்டதாகவும் வேறு சிறு பிரச்சனைகளும், ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில் புதிய கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் இன்று முதல் 180 இருக்கையில் இருந்து 194  இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக கொழும்பு, சிங்கப்பூர், துபாய், தமாம்,  மஸ்கட், தோஹா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு  விமானங்கள் இயக்கப்படும் என விமான நிலைய ஆணையகம் அறிவித்து உள்ளது. ஜூலை மாதத்திற்குள் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பட இருக்கிறது. அப்போது இந்த முனையங்களில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் இயங்கத் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!