மரக்காணம் கலவரம்: பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...

மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட  சேததிற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு  ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மரக்காணம் கலவரம்:  பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...

மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, ஏற்பட்ட  கலவரத்தில் அரசியல் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வட மாவட்டங்களில்  போராட்டம் வெடித்தது. அத்துடன் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து உடைத்து  சேதப்படுத்தப்பட்டதுடன், பொது சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இது தொடர்பான வழக்கை இன்று  விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம்,பொது சொத்துக்களை சேதபடுத்தினால் மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க சட்டத்தில்  வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீடு வசூலிக்க எந்தவித தடையும் இல்லை என நீதிபதி குறிப்பிட்டார். 

இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகு, இழப்பீடு  நிர்ணயிக்கப்படும் என்பதால், அரசுக்கு  பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி,  பாமகவின் நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார். அத்துடன் கலவரம் தொடர்பான விசாரணையை 4 மாதத்தில் அரசு  முடிக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டது..

அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை மறந்ததால்தான், இதுபோன்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயல்களில்  ஈடுபடுவதாக தெரிவித்த  நீதிபதி, கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் போராட்டங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி  அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தை  இனி வரும் காலங்களில்  கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வருவாய் நிர்வாக ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது