பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி...

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். டி. என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. பின்னர் ராணுவ மருத்துவமனையில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு அவர்களது உடல்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கே. என். நேரு, சாமிநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து  குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 13 ராணுவ அதிகாரிகளின் உடலுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கத்தை அனுசரிக்கும் விதமாக கறுப்பு துண்டு அணிந்து வந்து முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.