செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார் " - எடப்பாடி பழனிச்சாமி.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமண திருமண விழா திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறையால் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, தற்போது புதிதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், செந்தில் பாலாஜி விஷயத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
.
இதனையடுத்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 4 ஆயிரம் டாஸ்மாக் மதுபான பார்களுக்கு முறையாக டெண்டர் விடப்பட வில்லை என்ற அவர், இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!