அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...! சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை...!

பல்லடம் பேருந்து நிலையம் அருகே அரசு கலை கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்...!

அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...! சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை...!

திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம் சாலையில் புரட்சி தலைவி அம்மா அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவரை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சிலர் நேற்று கல்லூரி முடிந்து செல்லும் போது பல்லடம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரசந்தையில் வைத்து தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து இன்று கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர், இது குறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவம் குறித்து முதலாம் ஆண்டு மாணவர்கள் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் கேட்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இன்று மாலை கல்லூரி முடிந்து பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த முதலாம் ஆண்டு மாணவரை மீண்டும் தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார் வருவதற்குள் மாணவர்கள், தப்பி சென்ற நிலையில் அங்கிருந்த சில மாணவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணர்கள் சண்டையிட்டு கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.