தேசிய நெடுஞ்சாலைகளில் தொடரும் வழிப்பறி... மணப்பாறை அருகே பரபரப்பு...

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுனரை தலையில் வெட்டி காயப்படுத்தி வழிப்பறி. அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த இரண்டு வழிப்பறி சம்பவங்களால் பரபரப்பு.

தேசிய நெடுஞ்சாலைகளில் தொடரும் வழிப்பறி... மணப்பாறை அருகே பரபரப்பு...
திண்டிவனத்தில் இருந்து திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆவாரம்பட்டிக்கு கூலிங் சீட் ஏற்றி வந்த டாரஸ் லாரி ஒன்று லோடு இறக்கி விட்டு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டவர்கோவில் செக்போஸ்ட் என்ற இடத்தில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் சிவா (43) என்பவர் லாரியின் பின் பகுதியில் படுத்து தூங்கியுள்ளார்.
அதிகாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கையில் வைத்திருந்த கத்தியால் சிவாவின் தலையில் வெட்டி விட்டு அவரிடமிருந்த ரூபாய் 800 ரொக்க பணம் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றனர். 
 
இதையடுத்து சித்தாந்தம் என்ற இடத்தில் இதே மர்ம நபர்கள் மற்றொரு லாரி டிரைவர் பாபு என்பவரிடம் ரூ. 4000 பணம் மற்றும் மொபைல் போனை வைத்து தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் வெட்டியதில் தலையில் காயமடைந்த சிவாவிற்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.