"தொடரும் அட்டூழியம்".. 22 மீனவர்களை கச்சத்தீவு அருகே கைது செய்த இலங்கை கடற்படை!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

"தொடரும் அட்டூழியம்".. 22 மீனவர்களை கச்சத்தீவு அருகே கைது செய்த இலங்கை கடற்படை!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்ந்து அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 

இதேபோன்று காரைக்கால் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 23-ம் தேதி 13 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் படகுடன் 13 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர்.  

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 23 நாட்களில் 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதில் 21 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் மற்றும் விசைப்படகையும் விரைவாக மீட்டு தர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.