அண்ணன் டி.ஜே வாழ்க என்னும் புதிய முழக்கத்தால் சர்ச்சை.. ஜெயக்குமார் மூன்றாவது அணியை உருவாக்குகிறாரா..?
அதிமுக அலுவலகத்தில் புதிதாக எழுந்துள்ள அண்ணன் டி.ஜே வாழ்க என்னும் முழக்கத்தால், ஜெயக்குமார் மூன்றாவது அணியை உருவாக்கிறாரா என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மான கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக அலுவலகம் எதிரே ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இருத்தரப்பினராக பிரிந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அதிமுக அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தபோது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு கோஷமிட்டனர். இதனையடுத்து ஜெயக்குமாரை அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர். அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு எதிராக அண்ணன் டி. ஜே வாழ்க என தொண்டர்கள் புதிய முழக்கம் எழுப்பினர்.
அதிமுக அலுவலகத்தில் ஏற்கனவே பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் டி. ஜே. வாழ்க என தொண்டர்கள் முழக்கம் எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் பிரச்சினைக்கு நடுவே, ஜெயக்குமார் மூன்றாவது அணியை உருவாக்குகிறாரா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.