கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி... அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்...

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி... அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்...

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படியாக, தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வருவாய் அதிகாரி கண்ணபிரான், உதவி ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். பேரணி, தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து தொடங்கி முத்துநகர் கடற்கரை வரை சுமார் 3 கி.மீ. நடந்தது. இதில் கொரோனா வழிகாட்டுதல்  நெறிமுறைகளை உணர்த்தும் வகையில் மெய்சித்திர விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கொரோனா தொற்று 3-வது அலை தூத்துக்குடி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். இருப்பினும் 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், தடையில்லா ஆக்ஸிஜன் வழங்குவது, கூடுதல் படுக்கைகள் என  அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

"மக்களை தேடி மருத்துவம்" திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் கீழமுடிமன் கிராமத்தில் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக நோய்வாய்ப்பட்டு நேரடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற முடியாதவர்களின் உடல் நலனை பாதுகாக்க அவர்களின் வீடுகளுக்கே சென்று உடல் பரிசோதனை செய்தல் மருந்துப் பொருட்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.