"தயாரிப்பாளர்கள் கில்டு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனடி நடவடிக்கை" நீதிமன்றம் உத்தரவு!

"தயாரிப்பாளர்கள் கில்டு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனடி நடவடிக்கை" நீதிமன்றம் உத்தரவு!

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கில்ட் தரப்பில் அதன் தலைவர் ஜாகுவார் தங்கம் தாக்கல் செய்துள்ள வழக்கில், கில்டின் பணிகளில் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கில்டின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், தனக்கும், பணியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, செயலாளரும் பொருளாளரையும் கில்டிற்குள் விடாமல் மனுதாரர் தடுத்தபோது, ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக சீல் வைக்கப்பட்டு, பின்பு அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.

கில்டு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஸ்வரி ஆஜராகி, பொருளாளர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், செயலாளரை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். கில்டிற்கு தொடர்பில்லாத மூன்றாம் தரப்பினர் இடையூறு ஏற்படுத்துவதாகவும், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் வரை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கில்டிற்கு வந்து அதன் பணிகளில் ஈடுபட செயலாளரை தடுக்கக் கூடாது என்றும், கில்டிற்கு தொடர்பில்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை செயல்படுத்திவதில் யாரும் பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.

இதையும் படிக்க:தென்னிந்தியாவின் மிக நம்பகமான நிறுவனமாக ஜி-ஸ்கொயர் தேர்வு!