சென்னை விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு வீட்டு உபயோக பொருளுடன் மறைத்து கடத்தி வந்த ரூ. 60 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில்  ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அதில் சென்னையை சேர்ந்த 27 வயது வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் வீட்டு உபயோக கரண்டி  போன்ற பொருட்கள் இருந்தன.

அவற்றை பிரித்து பார்த்த போது  தங்கத்தை கம்பி போல் மறைத்து  வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து ரூ. 60 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.