டிஐஜி இறுதிச் சடங்கிற்காக தேனி செல்லும் டிஜிபி சங்கர் ஜிவால்...!

டிஐஜி இறுதிச் சடங்கிற்காக தேனி செல்லும் டிஜிபி சங்கர் ஜிவால்...!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார், கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றிய விஜயகுமார், கோவை சரக டிஐஜி-யாக மாற்றப்பட்டு, கடந்த ஜனவரி 7 ஆம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களாகவே விஜயகுமார் குடும்ப பிரச்னையின் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக  கூறப்படுகிறது. மேலும் தூக்கமின்மை காரணத்தினால், தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தூக்க மாத்திரையை உட்கொள்வதையும் அவர் வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

இதையும் படிக்க : "அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற, கோப்புகளே வரவில்லை என்று ஆளுநர் மறைப்பதா?" அமைச்சர் ரகுபதி கேள்வி!

இந்நிலையில் இன்று காலை தனது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.

இதனிடையே டிஐஜி விஜயகுமார் மறைவிற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,  தனது பணிக்காலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி பெருமை சேர்த்துள்ளார் என்றும், அவரது இழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டிருந்த டிஐஜி விஜயகுமார் உடலை, விசாரணைக்காக ஆர்.டி.ஓ கோவிந்தன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கோவை மாநகர ஆணையர், பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உடலை பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கில், டிஜிபி சங்கர் ஜிவால் கலந்துகொள்கிறார்.