சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்

தஞ்சை அருகே சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிவிட்டு,காரில் ஏறி தப்பிக்க முயன்ற திமுகவினரை ஊர் மக்கள் மறித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்

தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர் மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கிரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று மாலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிருந்தா நகரை சேர்ந்த மன்னார்குடி திமுக நான்காவது வட்டப் பிரதிநிதி.  பாண்டவர் (54), மற்றும் அவரது நண்பர்களான திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் , முருகேசன், மற்றும் திமுக நிர்வாகிகளான  சுரேஷ் பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்று விட்டு  மன்னார்குடி பிரிவு சாலையில் இருந்த பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளனர்.

அப்போது கடையில் இருந்த பெண் சிகரெட் கொடுக்க காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், கடையில் இருந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியும், பெண்ணின் உடையை பிடித்து இழுத்த தாக கூறப்படுகிறது.

இதனால் கடை ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அங்குள்ள சேர், டீ பாய்லர் ஸ்டாண்டு, இரு சக்கர வாகனம் மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். தகவல் அறிந்த கடையின் முதலாளி ஆனந்தன் சூரக்கோட்டையில் உள்ள ஆட்களுடன் கடைக்கு வந்துள்ளார். அவர்களை கண்டதும் தகராறில் ஈடுபட்ட ஆறு நபர்களும் அங்கிருந்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அவர்களை சுற்று வளைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரின் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.