தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை அரசியலா? தலித் கிறிஸ்தவ அமைப்பினர் பரபரப்பு பேட்டி! 

தமிழகத்தில் விகிதாசாரத்தின் அடிப்படையில்  12  கத்தோலிக்க திருச்சபைகளில் தலித் சமூகத்தை சார்ந்தவர்களையே ஆயர்களை நியமிக்க வேண்டும் என கூறிக்கொள்கிறோம்.

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை அரசியலா? தலித் கிறிஸ்தவ அமைப்பினர் பரபரப்பு பேட்டி! 
தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை அரசியலால், தலித் சமூகத்தை சார்ந்தவர்களை ஆயர்களாக நியமிக்க சாதிய தீண்டாமை பாகுபாடு காட்டுவதாக தூத்துக்குடியில் தலித் கத்தோலிக்க கிறித்துவ அமைப்பினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து தென்னிந்திய தலித்  கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் யூஜின்  தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று காலத்தில் மக்கள் எல்லாம் மனிதநேயத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது கத்தோலிக்க திருச்சபை இதுதான் தருணம் என்று சமத்துவத்திற்கு எதிராக தீண்டாமையை கட்டவிழ்த்து விடுகிறது. தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்தவர்கள் 50 லட்சம் பேர் இருக்கக்கூடிய சூழ்நிலையில், அதில் 35 லட்சம் பேர் தலித் மக்கள் ஆவர். 
 
சேலம் மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறித்துவர்களில் 65 சதவீதத்திற்கும் மேல் பெருவாரியாக தலித் கத்தோலிக்க கிறித்துவர்களே உள்ளனர். அவ்வாறு இருக்க, விகிதாச்சார அடிப்படையில் பார்க்கும் போது அங்கு ஒரு தலித் சமூகத்தை சார்ந்தவரைத்தான் ஆயராக நியமிக்க வேண்டும். ஆனால், வேறு சமூகத்தை சார்ந்த ஒருவர் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழகத்தில் இருக்கக்கூடிய 35 லட்சம் தலித் கத்தோலிக்க கிறித்துவர்களின் விகிதாச்சாரத்தை கணக்கில் கொண்டு பார்க்கும் தமிழகத்தில் மொத்தம் உள்ள  18 ஆயர்களில் 12 ஆயர்களை தலித் சமூகத்தை சார்ந்தவர்களையே நியமணம் செய்யப்பட  வேண்டும்.   ஆனால் செங்கல்பட்டு மறைமாவட்டம் ஒன்றில் மட்டும் தான் ஒரே ஒரு தலித் ஆயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஆகவே, தமிழகத்தில் விகிதாசாரத்தின் அடிப்படையில்  12  கத்தோலிக்க திருச்சபைகளில் தலித் சமூகத்தை சார்ந்தவர்களையே ஆயர்களை நியமிக்க வேண்டும் என கூறிக்கொள்கிறோம். மேலும், தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்துவ திருச்சபையில் கடைபிடிக்கப்படும் தலித் தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாங்கள் இன்று ( 6.6.2021 ) எங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தொடரும் பட்சத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.