மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகனை தோட்டத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகனை சுற்றிவளைத்து பிடித்து வேலியில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகனை தோட்டத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் உமாபதி(55). இவர் வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ஆர்த்திக்கும், சென்னை முகப்பேரில் வசிக்கும் சத்தியநாராயணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியநாராயணனுக்கும் ஆர்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆர்த்தி சென்னையில் உள்ள அவரது சித்தியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சத்யநாராயணன் தனது நண்பர்களான கலையரசன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் காக்கா தோப்பூரில் உள்ள தனது மாமனார் உமாபதி வீட்டிற்கு அரிவாளுடன் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது உமாபதி சத்தம் போடவே அருகிலிருந்தவர்கள் ஒன்று கூடி மூவரையும் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து விவசாய தோட்டத்தின் வேலியில் கட்டி வைத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மூவரையும் மீட்டு  காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.