நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டிடம்? தீட்சிதர் குழு நீதிமன்றத்தில் மனு!

நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டிடம்? தீட்சிதர் குழு நீதிமன்றத்தில் மனு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்து  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பொது தீட்சதர் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதிகளில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, பொது தீட்சதர்கள் குழுவின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, நடராஜ் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு அக்டோபர் 17ஆம் தேதி  உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சதர்கள் குழு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், நடராஜ் தீட்சதர் கோவில் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத இந்து சமய அறநிலையத் துறையினருடன் சேர்ந்துகொண்டு கோவிலின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், கோவின் நிர்வாகத்திற்கு எதிராகவும் செயல்பட்டதால் பொது தீட்சதர் குழுவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இதேபோன்ற புகார் அளிக்கப்பட்ட நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் வந்து வீடியோ பதிவுடன் ஆய்வு செய்ததாகவும், அதன்பின்னர் அனுப்ப்பபட்ட நோட்டீஸ்களுக்கும், கட்டுமானங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலின் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், அதை தலையிட வைக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டு, உத்தரவை பெற்றுள்ளதாகவும் பொது தீட்சதர் குழு குற்றம்சாட்டியுள்ளது.

அறநிலையத்துறையின் கருவியாக செயல்படும் ஒருவர் தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரராக இருந்த தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மறு ஆய்வு மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அக்டோபர் 17ல் பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என பொது தீட்சதர் குழு இடைக்கால கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:காவல் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்களை பராமரிக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!