பெண் தலைமை காவலர்களுக்கு வழங்கப்பட்ட, எஸ்ஐ பதவி உயர்வை எதிர்த்த மனு தள்ளுபடி!

10 ஆண்டுகள் தலைமை காவலர்களாக பணியாற்றாத பெண் தலைமை காவலர்களுக்கு 2011ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு முதல்நிலை பெண் காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள், தலைமை காவலராக 10 ஆண்டுகள் பணியை முடிக்காமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக 2011-ம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதனால், 2011ம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட தங்களை விட பணி மூப்பு பட்டியலில் பெண் சிறப்பு எஸ்.ஐ.கள் மூத்தவர்களாக உள்ளதால் தங்களது பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக கூறி, 2011ல் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஐ.கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், 10 ஆண்டுகள் தலைமை காவலர்களாக பணியை முடிக்காமல் இவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கிய 2011ம் ஆண்டு அரசாணையை ரத்து செய்ய கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், 12 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட  அராசணையை ரத்து செய்ய கோரி காலதாமதமாக வழக்கு தொடர முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 மேலும், 1990- 91ம் ஆண்டுக்கு பின், நேரடியாக முதல்நிலை பெண் காவலர்கள் பதவிக்கு தேர்வு நடத்தப்படவில்லை என்பதால்,  ஒருமுறை நடவடிக்கையாக முதல் நிலை பெண் காவலர்களாக நேரடியாக தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வை அரசு வழங்கியுள்ளது. 

தற்போது, இவர்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு டி.ஜி.பி., கடந்த ஆண்டு பரிந்துரை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி,  இந்த பதவி உயர்வு விவகாரத்தில் 1995-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழ்நாடு உள்துறையில் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த அரசாணைகளை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. அதனால், அந்த அராசாணைகளின்படி வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை எல்லாம் மீண்டும் பரிசீலிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!