”அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்”- ககன்தீப் சிங் பேடி

”அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்”-  ககன்தீப் சிங் பேடி

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்ளுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கண்காணிக்க வேண்டும், அரசு மருத்துவமனை முதல்வர்கள், டீன்கள், ஆகியோர், வெளி நோயாளிகளுக்கான நேரத்தைக் கட்டாயமாக கடைப்பிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தின் விவரங்கள் பின்வருமாறு:-

அதில், “அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதை மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.புறநோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

1). மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : 

புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணிவரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம்.

பிற மருத்துவர்கள் காலை 9 மணிமுதல் 4 மணிவரை இருக்க வேண்டும்.

மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். அவசரகால அடிப்படையில் 24 மணிநேரமும் தொடர்பில் இருக்க வேண்டும்.

2). மாவட்ட தலைமை மற்றும் பிற அரசு மருத்துவமனைகள் : 

புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணிவரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம்.

24 மணிநேர ஷிப்டுகளில் இருக்கும் மருத்துவர்கள் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை புறநோயாளிகளை பரிசோதனை செய்ய வேண்டும்.

பல் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் காலை 8 மணிமுதல் பகல் 1 மணிவரையும், மாலை 3 மணிமுதல் 5 மணிவரையும் பணியில் இருக்க வேண்டும்.

தலைமை மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் 1.30 மணிவரையும், மாலை 3 மணிமுதல் 5 மணிவரையும் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

3). சுகாதார நிலையங்கள்: 

1 முதல் 3 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் காலை 9 மணிமுதல் 4 மணிவரை மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.

5 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஷிப்ட் அடிப்படையில் மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க     | "திமுக தொண்டர்கள் நினைத்தால், ஆடு பிரியாணியாக ஆக்கப்படும்", ஆர் எஸ் பாரதி காட்டம்!