இ - சஞ்சீவனி திட்டம்: அசத்தி வரும் தஞ்சை, பெரம்பலூர்...

காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கும் இ - சஞ்சீவனி திட்டத்தில் அதிகம் பேர் மருத்துவ ஆலோசனை வழங்கிய மாவட்டத்தில் தஞ்சை மாவட்டம் 24 இடத்தையும், பெரம்பலூர் மாவட்டத்தில் 29 வது இடத்தையும் பிடித்துள்ளது  

இ - சஞ்சீவனி திட்டம்:  அசத்தி வரும் தஞ்சை, பெரம்பலூர்...

கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் ஒன்றிய அரசு இ - சஞ்சீவனி ஓபிடி என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடி மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

இதன்படி பொதுமக்கள் www.esanjeevaniopd.in என்ற இணையதளத்தில் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய கடவு எண் மூலம் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து மருத்துவரை சந்திப்பதற்கான டோக்கன் எண் வழங்கப்படும். இதைக் கொண்டு இணையதளத்தில் மருத்துவரை சந்திப்பதற்கான பிரிவில் நுழைய வேண்டும்.  இதன்பிறகு திரையில் call now என்ற வரும்போது அதை அழுத்தினால் மருத்துவர் காணொளி மூலம் காட்சி மூலம் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். தமிழகத்தில் எச்ஐவி, காசநோய், இயற்கை மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி அதிகம் பேர் ஆலோசனை பெற்ற மாநிலங்களில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. ஆந்திராவில் இதுவரை 27,51,271 பேர் ஆலோசனை பெற்றுள்ளனர். 2வது இடத்தில் கர்நாடகத்தில் 19,39,444 பேரும், 3வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 14,76,227 பேரும், 4 வது இடத்தில் உள்ள உத்திர பிரதேசத்தில் 12,32,627 பேரும், 5 வது இடத்தில் உள்ள குஜராத்தில் 4,16.221 பேரும் ஆலோசனை பெற்றுள்ளனர். அதிகம் ஆலோசனை பெற்ற முதல் 50 மாவட்டங்களில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இதன்படி 2,34,736 பேருடன் சேலம் 5 வது இடத்திலும், 1,03,117 பேரும் மதுரை 17 வது இடத்திலும், 90,947 பேருடன் திருவண்ணாமலை 20 வது இடத்திலும், 79,799 பேருடன் தஞ்சாவூர் 24 வது இடத்திலும், 74,084 பேருடன் பெரம்பலூர் 29 வது இடத்திலும், 51,649 பேருடன் திருவள்ளூர் 46 வது இடத்திலும், 50,829 பேருடன் செங்கல்பட்டு 47 இடத்தில் உள்ளது.