நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம்: 50% மானியம் ..!
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் மேற்கொள்ள 50% மானியம் வழங்கப்பட வுள்ளதாகவும், இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கூறினார்.
உதகையில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் பி அம்ரித் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :-
இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடியை ஊக்குவிக்கின்ற வகையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 60 கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார். இதன் மூலம் இயற்கை வேளாண்மைக்கு தேவைப்படும் நாட்டெருவு உற்பத்தி அதிகரிக்க வழிவகை செய்ய முடியும் என்றார்.
மேலும், மாவட்டத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 250 டன் ராகி பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
அதோடு, புலம்புயர்ந்த தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கின்ற வகையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ' ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை ' திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 1152 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ரேஷன் அட்டை தாரர்களின் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் 65 நியாய விலைக்கடைகளில் QR கோடை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் பிற மாநிலங்களிலிருந்து குறைந்த விலையில் கேரட் கொள்முதல் செய்து அதை வர்ணம் பூசி ஊட்டி கேரட் என்று விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கேரட் விதை கிலோ நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிக்க | அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!