எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது... ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக புகார்...

மோசடி புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது... ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக புகார்...

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளரான மணி பல்வேறு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவரும் கடந்த சில தினங்களாகவே தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பழனிசாமியின் தனி உதவியாளர் மணி முன் ஜாமின் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.37 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில்  போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மணி அதிகாலை தீவட்டிப்பட்டி அருகே உள்ள அவரது வீட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணியை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.