ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கு...உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கு...உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேர்தல் ஆணையம்  உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி  எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மரணமடைந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இளங்கோவனின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியில்  தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரம் செய்யப்பட்டபோது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரு வேட்பாளர்களுக்கும் தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரித்தததாகவும், அவர்களுக்கு நாளொன்றுக்கு 550 ரூபாய் வீதம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான உரிய கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையிலும்  தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : "லடாக் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவேன்" ராகுல்காந்தி ட்வீட்!

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது விதிமீறல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 கொட்டகைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு நாள் வரை தினமும் வாக்காளர்கள் தங்கவைக்கப்பட்டு, வாக்குகள் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பல்வேறு முறை கேடுகள் நடந்த நிலையில், அவற்றை தடுக்காமல் நடத்தப்பட்ட தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவில்லை என்பதால்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றும், அதில் ஈ.வி. கே. எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்,  இந்திய தேர்தல் ஆணையம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.