இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மம் தான் நிலைக்கும்: கமிஷனர் ஆபீஸில் சத்தியம் செய்த அன்னபூரணி அம்மா!!

ஆதிபராசக்தியின் அவதாரம் என தனக்குத் தானே பிரகடனப் படுத்தவில்லை எனவும், தனது ஆன்மீக சக்தியை உணர்ந்தவர்கள்தான் அவ்வாறு கூறி வருவதாகவும் பெண் சாமியார் அன்னபூரணி அரசு தெரிவித்துள்ளார்.

இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மம்  தான் நிலைக்கும்: கமிஷனர் ஆபீஸில் சத்தியம் செய்த அன்னபூரணி அம்மா!!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பெண் சாமியாரான அன்னபூரணி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் இயற்கை ஒளி என்ற பெயரில் தான் ஆன்மீக தீட்சை கொடுத்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும், செங்கல்பட்டு பகுதியில் ஆன்மீக பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல முறையில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி பல யூ-டியூப் சேனல்களிலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் தன்னை பற்றியும் தனது ஆன்மீக சீடர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் செய்திகளைப் பரப்பி வருவதாகவும், தனது கணவர் மாரடைப்பால் இறந்ததை சந்தேக மரணம் என தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

மேலும், தன்னை ஆன்மீக சேவையில் ஈடுபடக் கூடாது என தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக பல நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். எனவே தனது ஆன்மீகப் பணிக்கு களங்கம் விளைவித்தும், தனக்கும், தனது சீடர்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார். 

புகார் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த பெண் சாமியார் அன்னபூரணி அரசு, சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தன் மீது அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும், இது குறித்து புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், போலிச் சாமியார் என தன்னைப்பற்றி பேசி வருபவர்கள் தன்னை உணராதவர்கள் என்றும், தான் ஆன்மீகப் பணி செய்வதற்காக மட்டுமே வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

அதுமட்டுமல்லாமல் வெறும் வீடியோக்களைப் பார்த்து கிண்டல் செய்பவர்ககுக்கு தன்னைப் பற்றி தெரியாது எனவும், உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தன்னை பற்றி தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னை சாமியார், கடவுளின் அவதாரம் என தான் ஒரு போதும் கூறவில்லை என்ற அவர், ஆன்மீகம் வழியில் தன்னை உணர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆன்மீகம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? எந்த சக்தி அனைவரையும் இயக்குகிறது? என்பதை உணர்த்தும் ஆன்மீக பயிற்சிகளை வழங்கும் ஆன்மீக சேவையை மட்டுமே தான் வழங்கி வருவதாகவும், செய்திகளில் பரவுவதுபோல் தான் எந்த அருள்வாக்கும் தரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்மீக பணியைத் தான் தொடர்ந்து செய்வேன் என்ற அவர், இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மமே தான் நிலைக்கும் என்றார்.