உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக  மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணம் ....சிக்கிய 7 பயணிகள்...!!

சென்னையிலிருந்து வெளிநாட்டிற்க்கு கடத்த முயன்ற ரூ.58.53 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக  மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணம் ....சிக்கிய 7 பயணிகள்...!!

சென்னை பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு  செல்ல தயாராக இருந்த விமானத்தில் சில பயணிகள் வெளிநாட்டு கரண்சிகளை உள்ளாடைகளுக்குள் மறைத்து கடத்துவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையான DRI க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து DRI தனிப்படையினா் சென்னை பன்னாட்டு விமானநிலையம் விரைந்து வந்தனா். அவா்களுடன்  விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோ்ந்து, அந்த விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர்.

அப்போது விமானத்தில் ஒரு குழுவாக பயணித்த சென்னையை சேர்ந்த 7 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை தனியாக அழைத்து சென்று சோதனை  செய்தனர். அதில் அவா்களின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக  மறைத்து வைத்திருந்த சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலா் வெளிநாட்டு பணம் இருந்தது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு  ரூ.58.53 லட்சம் என தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை  பறிமுதல் செய்து 7 பேரின் விமான பயணங்களை ரத்து செய்தனா். அதோடு வெளிநாட்டு பணத்தை துபாய்க்கு கடத்த முயன்ற 7 பயணிகளையும்,சுங்கத்துறை அதிகாரிகள்  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.