ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் பிணையில் விடுவிப்பு...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக கைதான பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக,விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப கழக மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், கிருஷ்ணகிரி பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், அவரது உறவினர் நாகேசன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபாலாஜி 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக கைதான 4 பேருக்கு பிணை கேட்டு, அவர்களின் வழக்கறிஞர்கள் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மீது IBC 212 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. காவல்நிலைய பிணையில் விட வாய்ப்புள்ள பிரிவு என்பதால், அவர்களுக்கு பிணை வழங்கிய போலீசார் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்த அந்த நான்கு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.