எடப்பாடிக்கு  பொதுச்செயலாளர் அங்கீகாரம்..! இன்று ஆலோசனை...!!

எடப்பாடிக்கு  பொதுச்செயலாளர் அங்கீகாரம்..! இன்று ஆலோசனை...!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடா்ந்த வழக்கை அவசர வழக்காக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது என வாதம் முன்வைக்கப்பட்டது. தொடா்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிமுகவில் பொதுக்குழுவுக்கு தான் உச்சப்பட்ச அதிகாரம் உள்ளது எனவும் விதிகளின் படியே செயல்பாடு உள்ளதாக தொிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம் எனவும், முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டது.  

இந்நிலையில் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என உத்தரவிட்டது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே இந்த தீா்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இருவர் அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயா்நீதிமன்றம் இதுகுறித்து தோ்தல் ஆணையம் 10 நாட்களில் முடிவெடுக்கும்படி உத்தரவிட்டது. இந்த அவகாசம் வருகிற 22-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இது தொடா்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. ஆலோசனைக்கு பின்னரே எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளா் அங்கீகாரம் கிடைக்குமா? என்பது குறித்து தொியவரும்.