கொரோனாவால் பலியானவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொடுங்க- அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  

கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பலியானவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொடுங்க- அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு   

கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களுக்கு, கொரோனாவால் பலியானார் என சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என ஸ்ரீ ராஜலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 அப்போது தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளதாகவும், அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31க்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து,  அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரிய வந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.