டி.வி.டி. பிளேயரில் கடத்தி வரப்பட்ட தங்க தகடுகள்...! சுங்க அதிகாரிகளால் பிடிபட்ட சம்பவம்..!

டி.வி.டி. பிளேயரில் கடத்தி வரப்பட்ட தங்க தகடுகள்...! சுங்க அதிகாரிகளால் பிடிபட்ட சம்பவம்..!

துபாயில் இருந்து டி.வி.டி. பிளேயரில் கடத்தி வரப்பட்ட 910 கிராம் தங்கம், சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வரும் விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது. மேலும், ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை கைப்பற்றினர். அதில் இருந்த டி.வி.டி. பிளேயரை பிரித்து பார்த்த போது தங்க தகடுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

மேலும், அதேபோன்று துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 23 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 525 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ. 40 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள 910 கிராம் தங்கமும் ரூ.3 லட்சத்து15 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.