அரசு மருத்துவமனை முற்றுகை... பிரசவமான 11ஆம் நாளில் தாய் மரணம்...
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்த 11வது நாளில் தாய் இறந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு...
திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த கார்கோடியன் மனைவி நந்தினி பிரசவத்திற்காக கடந்த 6ஆம் தேதி திருவண்ணாமலை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக 7ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் 13ஆம் தேதி வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை நந்தினியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சுமார் 1:30 மணி அளவில் நந்தினி இறந்துள்ளார்.
இதை அறிந்த நந்தினியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.