வங்கக்கடலில் உருவாகியது குலாப் புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘குலாப்’ புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியது குலாப் புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு ‘குலாப்’என பெயரிடப்பட்டுள்ள நிலையில், புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து மாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய விசாகப்பட்டினம்-கோபால்பூர் வழியாக கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை  தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் சின்னம் காரணமாக குமரி கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.