செந்தில் பாலாஜின் ஜாமீன் மனு இன்று விசாரணை!

செந்தில் பாலாஜின் ஜாமீன் மனு இன்று விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம். எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14-ம் தேதி மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம். எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

இதனையடுத்து எந்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் முறையிட்டார்.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதனை மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:ஜி 20 தலைமைப் பொறுப்பை பிரேசிலுக்கு வழங்கியது இந்தியா!