சென்னையில் தொடரும் கனமழை.... 8 விமானங்கள் ரத்து...

கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 4 விமானங்கள், வரவிருந்த 4 விமானங்கள் உட்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடரும் கனமழை.... 8 விமானங்கள் ரத்து...

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாளை மாலை வரை இந்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் கடந்த சில தினங்களாக பல  விமானங்கள் சிறிது நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது, எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை.

ஆனால் இன்று மாலை 4.10 மணிக்கு சென்னை -மதுரைக்கு 40 பயணிகளுடன் செல்லவிருந்த இண்டிகோ  விமானம், இரவு 7.55 மணிக்கு சென்னை-திருச்சிக்கு 41 பயணிகளுடன் செல்லவிருந்த இண்டிகோ  விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் இன்று இரவு 7.30 மணிக்கு மதுரை-சென்னைக்கு 74 பயணிகளுடன் வரவேண்டிய இண்டிகோ விமானம், இரவு 10.30 மணிக்கு திருச்சி-சென்னைக்கு 34 பயணிகளுடன் வரவேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான நிறுவனம்,விமானங்கள் ரத்து பற்றிய தகவலை தெரிவித்து,அவா்களுடைய பயண டிக்கெட்களை வேறு தேதிகளுக்கு மாற்றுவது, ரீபண்ட் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.   

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை-திருச்சி விமானம்,திருச்சியில் பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி, மறுநாள் அதிகாலை மீண்டும் திருச்சி புறப்பட்டு சென்றது. இதனால் திருச்சியிலிருந்து சென்னை வரவேண்டிய பயணிகள் இரவு முழுவதும் திருச்சி விமானநிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அதைப்போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையிலிருந்து இன்று இரவு 7.55 மணிக்கு 85 பயணிகளுடன் மும்பை செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானமும், மும்பையிலிருந்து நாளை அதிகாலை ஒரு மணிக்கு 39 பயணிகளுடன் சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று சாா்ஜாவிலிருந்து இன்று இரவு 8.55 மணிக்கு 154 பயணிகளுடன் சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வர வேண்டிய ஏா் அரேபியா  விமானமும், இன்று இரவு 9.35 மணிக்கு 127 பயணிகளுடன் சென்னை பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து சாா்ஜா புறப்பட்டு செல்ல வேண்டிய ஏா் அரேபியா  விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் சென்னை விமானநிலையத்தில் இன்று மழை காரணமாக அதாவது மதுரை, திருச்சி,மும்பை ஷார்ஜாவில்  இருந்து  வருகை தரும் மற்றும் புறப்படும் 8 விமானங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக சென்னை  விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.