முல்லை பெரியாறில் இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்க மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

முல்லை பெரியாறில் இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்க மனு;  உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், மற்றும் கனகசபாபதி  ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில்  முல்லை பெரியாறில் இரண்டாவது சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தனர். அம்மனுவில் கூறியிருந்ததாவது,முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு கொள்ளளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்னர், முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து அப்போதில் இருந்து பெரியாறு அணையில் 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரள கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு, வீணாகிறது. தமிழகப் பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும். இதைவிட கூடுதலாக இந்த வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால், 142 அடிக்கும் அதிகமாக உள்ள தண்ணீர் வீணாக கேரள பகுதியில் வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் லோயர்கேம்பில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை 259 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயத்திற்கு நீர்பாசனம் கிடைக்கும் மேலும் குடிநீருக்கு பற்றாக்குறை இருக்காது.

எனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்த பிறகு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில்,இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சினை என்றால்,  உச்சநீதிமன்றத்தை தான் அனுக வேண்டும் என பல உத்தரவுகள் உள்ளன. எனவே மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அனுகி, நிவாரணம் பெறலாம் என நீதிபதிகள் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க:சிறுத்தை தாக்குதல் எதிரொலி; கைத்தடி வழங்கிய தேவஸ்தானம்!