காவலர் மீது கொலைவெறி தாக்குதல் - திமுக ஒன்றிய செயலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டம்  அருகே சீட்டு பணத்தை கேட்க சென்ற காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக ஒன்றிய செயலாளர் ஜான்சன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... 

காவலர் மீது கொலைவெறி தாக்குதல் - திமுக ஒன்றிய செயலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு

ஈரோடு  அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். தலைமைகாவலரான இவர் மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் பணி பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபிகா சிறு சேமிப்பு,ஏலச்சீட்டு  நடத்தி வருகிறார். அதில் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் ஜான்சன் என்பவர் ஏலச்சீட்டில் கலந்து கொண்டு 1லட்சம் ரூபாய் சீட்டு எடுத்த நிலையில், மீதமுள்ள சீட்டு 30ஆயிரம் ரூபாய் தவனைத்தொகையை செலுத்தாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து தீபிகாவின் கணவர் ஜெயக்குமார், திமுக நிர்வாகி ஜான்சனிடம் சீட்டு பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவரிடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜான்சன் தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் சேர்ந்து தலைமை காவலர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் காவலர் ஜெயக்குமார் தலை பகுதியில் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே காவலர் மீது தாக்குதல் நடத்திய 8-பேர் மீது பள்ளிபாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்படி ஜான்சனின் உறவினரான பீரவின்சன்,வைதீஸ்வரன் மற்றும் மேலாளர் சீராஜ்தீன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகியை பள்ளிபாளையம் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.