பல்லியுடன் சாப்பாடு போட்ட ஹோட்டல்... திருச்செந்தூர் கோவில் அருகே பரபரப்பு...

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அருகே உள்ள பிரபல உணவகத்தில், சாப்பாட்டில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லியுடன் சாப்பாடு போட்ட ஹோட்டல்... திருச்செந்தூர் கோவில் அருகே பரபரப்பு...
தமிழகத்தின் ஆன்மீக சுற்றுலா நகரமான திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனையடுத்து, திருச்செந்தூர் கோவில் மற்றும் நகர்ப்பகுதிகளில் வெளியூர் மக்களை கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் நுழைவாயில் அருகே உள்ள காவிரி உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாப்பாட்டில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவக உரிமையாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.
 
அதற்கு உணவக உரிமையாளர் உணவிற்கு பணம் வேண்டாம் என்றும், இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத்தல பகுதியில் இயங்கக்கூடிய உணவகத்தில் இதுபோன்ற அலட்சியமான செயல்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.