சிசிடிவி செயலிழந்தது எப்படி...? யார் காரணம்..? ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை...!

சிசிடிவி செயலிழந்தது எப்படி...? யார் காரணம்..?  ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை...!

தமிழக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தது தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல தகவல்கள் கூறப்பட்ட நிலையில், சிசிடிவி செயலிழப்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையின் 2- வது தளத்தை; சிசிடிவி கேமராக்கள் செயலிழக்க வைக்கப்பட்டன. மேலும் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படியே சிசிடிவி கேமிராக்க்கள் செயலிழக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அப்போலோ மருத்துவமனையில்  விதிமுறைகளின் படி சிசிடிவி கேமிராக்கள் பராமரிக்கப்படுவதாகவும், அந்த கேமிராக்களை யாரும் அகற்ற சொல்லவில்லை எனவும் ஆணையத்தில் ஆஜரான மருத்துவமனை சாட்சியங்கள் வாக்குமூலம் அளித்துள்ளன. 

தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் மட்டுமே அணைக்கப்பட்டதாகவும், அது யார் உத்தரவின்படி அணைக்கப்பட்டது என தனக்கு தெரியாது எனவும் ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரப்பெருமாள் தெரிவித்துள்ளார். 
மேலும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன், ஜெயலலிதாவை ஸ்கேனுக்கு அழைத்து செல்லும் போது மட்டும் சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்படும் எனவும் மற்ற நேரத்தில் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனாலும் சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : சசிகலா, சி.விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்.. ஆறுமுகசாமி ஆணையத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்..!