" கழிவுநீர் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறக்க அனுமதிக்க கூடாது " - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு...!

" கழிவுநீர் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறக்க அனுமதிக்க கூடாது " -  நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு...!

கழிவுநீர் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறக்க அனுமதிக்க கூடாது என்றும், மீறுகிறவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு பணியாளரையும் அபாயகரமான கழிவு நீர் கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மேலும், இந்த நிபந்தனையை முதன் முறையாக மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறை மீறினால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழிவுநீர் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர்/  ஒப்பந்ததாரர் 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக இறந்த பணியாளரின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், உரிமம் பெறாத லாரிகளை கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், உரிமம் பெற்றுள்ள கழிவு நீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்றுவதோடு, அனைத்து கழிவுநீர் லாரிகளும் முறையான பராமரிப்புடன் இருக்க வேண்டும் எனவும், லாரிகளின் இயக்கங்கள் GPS கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறும் லாரிகளுக்கு முதல் முறையாக ரூபாய் 25,000, இரண்டாம் முறைக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கவும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு, திறந்த வெளி மற்றும் நீர்நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றக் கூடாது என்றும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க    |  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமின்...விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!