என் பொண்டாட்டி கோவிச்சிட்டு போய்ட்டா... போதையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய கணவன்...

மனைவியை சேர்த்து வைக்க கோரி மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய கணவன் - மனைவியை அழைத்துவந்து பேச்சுவார்த்தை நடத்தி கணவனை மீட்ட காவல்துறையினர்.

என் பொண்டாட்டி கோவிச்சிட்டு போய்ட்டா... போதையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய கணவன்...

மதுரை வில்லாபுரம் அருகே மூலக்கரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு பாக்கியலெட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாக மனைவி பாக்கியலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக பலமுறை வீட்டிற்கு வருமாறு மனைவியிடம் கோரிக்கை விடுத்தும் மனைவி பாக்கியலட்சுமி வர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கணவர் கண்ணன் இன்று மதுபோதையில் திடீரென கீரைத்துறை பகுதியில் உள்ள செல்போன் டவரின் உச்சியில் ஏறி நின்றபடி மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க கோரி தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த கீரைத்துறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கீழே இறங்காத கண்ணன் மதுபோதையில் தலைகீழாக தொங்குவது, ஒற்றைகாலில் நிற்பது, நடனம் ஆடுவது என  டவரில் சாகசம் செய்துகொண்டிருந்தார்.

பொறுமை இழந்த காவல்துறையினர் இளைஞரின் மனைவியான பாக்கியலெட்சுமியை அழைத்துவந்து அழைப்பு விடுத்த பின் போதை இறங்கியுவுடன் மனம் இறங்கிய கண்ணன் உயிருக்கு பயந்து டவரில் இருந்து வேகவேகமாக இறங்கினார். மதுபோதையில் இளைஞர் கண்ணன் செய்த தற்கொலை முயற்சி சம்பவத்தால் காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் நீண்ட நேரத்திற்கு பின் நிம்மதி மூச்சு விட்டனர்.