"மாதவிடாய் காலத்திலும் பெண்கள் பூஜை செய்யலாம்" - திருமாவளவன் பேட்டி

மாதவிடாய் காலத்திலும் பெண்கள் பூஜை செய்யலாம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டியவர் பங்காரு அடிகளார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மிக தலைவருமான பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தை கட்சி மாநில தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பங்காரு அடிகளாரின் மறைவு சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் பேரிழப்பாக உள்ளது என தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்கு முன்பு கருவறைக்குள் பெண்களௌம் செல்லலாம், பூஜை செய்யலாம் என்பதை சிந்தித்து அதை செயல்படுத்தி காட்டியவர். 

மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கின்ற காலத்தில், கோயில் கருவறைக்குள் பெண்கள் எந்த காலத்திலும் பூஜை செய்யலாம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டியவர் பங்காரு அடிகளார் என்று பெருமிதம் தெரிவித்தார்.