கடற்கரையில் ஒதுங்கிய பொக்கிஷங்கள்… நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

சென்னை கடற்கரை ஓரமாக ஐம்பொன் சிலைகள் கரை ஒதுங்கிய நிலையில், கடல் வழியாக ஐம்பொன் சிலைகளை கடத்த திட்டம் வகுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரையில் ஒதுங்கிய பொக்கிஷங்கள்…  நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

சென்னை பெசன்ட் நகர் பகுதிக்கு உட்பட்ட ஓடைக்குப்பம் என்ற ஒடைமாநகர் பகுதியின் அருகில் உள்ள கடற்கரையோராமாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மாலை  நடைபயிற்சி மேற்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கடற்கரை ஓரமாக சிலைகள் ஒதுங்கி இருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்டெடுக்கப்பட்ட 5 சிலைகள் சுமார் அரை அடி உயரத்தில் இருந்துள்ளன. ஒரு அர்த்தநாரீஸ்வரர் சிலை, ஒரு பீடம், ஒரு அனுமர் சிலை மற்றும் 2 யானை சிலைகள் இருந்துள்ளன. இதில் அனுமர் சிலையின் மீது 1875 என்று வருடம் பொறிக்கப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருகில் உள்ள பழண்டி அம்மன் கோவிலின் உள்ளே வைத்துவிட்டு, காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சாஸ்திரிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலைகளை கண்டெடுத்த பொதுமக்களிடம் சிலைகளை எடுத்துச் செல்ல தருமாறு கேட்டபோது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி அதன் பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வேளச்சேரி தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினார். சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை ஓரம் சிலைகள் ஒதுங்கியிருந்ததால் கடல் மார்க்கமாக ஏதேனும் கும்பல் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்த முயற்சி செய்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்திலிருந்து சேர, சோழ கால சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி பல கோடி ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்கப்பட்டதும்  அவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.