ஒரே பெயரில் பல மின் இணைப்பா..? கடுமையான நடவடிக்கை என எச்சரிக்கை... 

ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள தாழ்வழுத்த மின் இணைப்புகள் குறித்து தொடர் ஆய்வுகளை நடத்துமாறு பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தல்

ஒரே பெயரில் பல மின் இணைப்பா..? கடுமையான நடவடிக்கை என எச்சரிக்கை... 

ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள வணிகப் பிரிவு தலைமை பொறியாளர், பலமுறை அறிவுறுத்தியும் ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல இணைப்புகள் சட்டவிரோதமாக வழங்குவது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும்,

ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள தாழ்வழுத்த மின் இணைப்புகள் குறித்து தொடர் ஆய்வுகளை நடத்த வேண்டும் என, பகிர்மானப் பிரிவு தலைமை பொறியாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெறப்பட்ட இணைப்பை ஒருங்கிணைக்காமலும், உயரழுத்த இணைப்பாக மாற்றாமலும் உள்ள நுகர்வோருக்கு 3 மாத அவகாசம் வழங்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும்,

இது தொடர்பான உயரதிகாரிகளின் ஆய்வின் போது, பல இணைப்புகள் ஒரே பெயரின் கீழ் ஒரே வளாகத்தில் இருப்பது தெரியவந்தால் பொறுப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள அவர், ஒவ்வொரு குடியிருப்பிலும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டது என கணக்கெடுப்பதோடு, மீண்டும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி ஆய்வு மேற்கொண்டு வாரியத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.