திருவண்ணாமலையில் பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் திறப்பு...!

திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளாா். 

 
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா். அதற்காக அவா் நேற்று இரவு சென்னையில் இருந்து காா் மூலம் திருவண்ணாமலை சென்றடைந்தார். அவருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிடவுள்ளாா். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மலப்பாம்பாடி கிராமத்தில் திமுக சார்பில் நடைபெறும் வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர். 

பின்னர் முதலமைச்சர் திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளாா். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.