அரசு பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உயர்வு... 40% உயர்த்தி அறிவித்தார் நிதியமைச்சர்...
தமிழக அரசுப் பணி நியமனங்களில், பெண்களுக்கான ஒதுக்கீட்டினை 40 சதவிகிகதமாக உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு திட்டங்கள் துறை அறிக்கை தொடர்பாக, சட்டப்பேரவையில் உரையாற்றிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து பேசினார்.
2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறிய அமைச்சர், 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை என்றும், 143 அறிவிப்புகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், போட்டித் தேர்விற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை, 40 சதவிகிதமாக உயர்த்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்தார்.