சுதந்திர தின கொண்டாட்டம்; கோட்டை கொத்தளத்தில் 2-ஆம் நாள் ஒத்திகை!

சுதந்திர தின கொண்டாட்டம்; கோட்டை கொத்தளத்தில் 2-ஆம் நாள் ஒத்திகை!

நாட்டின் 76 -ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் இரண்டாம் நாள் ஒத்திகை நடைபெற்றது.

நாட்டின் 76 -ஆவது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டைப் போலவும் இந்த ஆண்டு மூன்று நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் நாள் ஒத்திகை கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் நாள் ஒத்திகை இன்றும் மற்றும் மூன்றாம் இறுதி நாள் ஒத்திகை  13 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  

சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.  தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7  படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்ற ஒத்திகை நடைபெற உள்ளது. 

குறிப்பாக, இந்த நாட்களில் காலை 6 மணி முதல் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"ஏழை, எளிய மக்களுக்கு பிரதமர் மோடி புதிய நம்பிக்கை அளித்துள்ளார்" -அமித்ஷா!